ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2008

இன்பத் தமிழ்

தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!

சனி, 14 ஜூன், 2008

கல்விளான்

கறுப்பு ஜூலைக்கலவரம்

கறுப்பு ஜூலை (ஆடிக்கலவரம்) என்பது ஜூலை 23, 1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகளால் இலங்கைத் தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்ட, சொத்துக்கள் அழிக்கப்பட்ட அபகரிக்கப்பட்ட, 3000 பேர் வரை படுகொலை செய்யப்பட்ட ஒரு துன்பவியல் நிகழ்வாகும்(ஆதாரம் தேவை). இது தமிழீழ விடுதலைப் புலிகள் 13 இலங்கை இராணுவத்தினரை யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் படுகொலை செய்ததின் தூண்டுதல் விளைவு எனப்பட்டபோதும், இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பு முறை ஒரு திட்டமிட்ட செயற்பாடாகவே நம்பப்படுகிறது. கறுப்பு யூலை நிகழ்வுகளே இலங்கை இனப்பிரச்சினை ஆயுதப் போராட்டமாக மாறக் காரணமானதாகப் பார்க்கப்படுகின்றது.

வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள்

வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள் ஜூலை 1983 இல் இலங்கையில் இலங்கைத் தமிழர்களுக்கெதிராக இடம்பெற்ற கறுப்பு ஜூலை வன்முறை நிகழ்வுகளின் போது இடம்பெற்ற உச்சக்கட்ட நிகழ்வைக் குறிக்கும். இதன் போது மொத்தம் 53 தமிழ் அரசியல் கைதிகள் கொழும்பின் அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் சக சிங்களக் கைதிகளால் குத்தியும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர்.இப்படுகொலை நிகழ்வில் எவரும் இதுவரையில் குற்றஞ்சாட்டப்பட்டுத் தண்டிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படுகொலை நிகழ்வானது இரண்டு வெவ்வேறு நாட்களில் நடைபெற்றது. இரண்டும் கொழும்பில் அதியுயர் பாதுகாப்பு சிறைச்சாலையான வெலிக்கடையில் இடம்பெற்றன. முதலாவது படுகொலை ஜூலை 25, 1983 இல் 35 தமிழ்க் கைதிகள் சக சிங்களக் கைதிகளினால் கத்தி மற்றும் வாள்களினாலும் பொல்லுகளினாலும் குத்திக் கொல்லப்பட்டனர். இரண்டாவது நிகழ்வு இரண்டு நாட்களின் பின்னர் ஜூலை 28ம் திகதி இடம்பெற்றது. இதில் 18 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர்.

வெலிக்கடைச் சிறைச்சாலையானது A, B, C, D என நான்கு குறுக்கு வடிவில் அமைகக்ப்பட்ட பிரிவுகளைக் கொண்டது. இவற்றில் A3 B3 C3 மற்றும் D3 என்பன சிறைச்சாலையில் கீழ்ப் பகுதியில் உள்ளன. B3, C3 மற்றும் D3 இல் இருந்த அனைவரும் தமிழ் அரசியல் கைதிகளாகும். A3 இல் இருந்தவர்கள் அனைவரும் பயங்கரக் குற்றங்கள் சுமத்தப்பட்ட சிங்களக் கைதிகள்.

இப்படுகொலை நிகழ்வில் தப்பிப் பிழைத்தவர்களின் வாக்குமூலத்தின்படி சிறைச்சாலை அதிகாரிகளே அறைக்கதவுகளின் திறப்புகளை சிங்களக் கைதிகளுக்கு கொடுத்ததாக தெரிவித்தனர். ஆனால் சிறை அதிகாரிகளின் கூற்றுப்படி சிங்களக் கைதிகள் தம்மிடம் இருந்து திறப்புகளைக் களவெடுத்ததாகத் தெரிவித்தனர்.

களுத்துறை சிறைச்சாலைப் படுகொலைகள்

களுத்துறை சிறைச்சாலைப் படுகொலைகள் டிசம்பர் 12, 1997, இலங்கையில் களுத்துறை நகரில் உள்ள உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் இடம்பெற்றன[1]. மூன்று இலங்கைத் தமிழ் அரசியற் கைதிகள் அதே சிறைச்சாலையில் சிறை வைக்கப்படிருந்த சிங்களக் கைதிகளினால் வெட்டில் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வில் சம்பந்தப்பட்ட எவரும் இதுவரையில் தண்டிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படுகொலைகள் இடம்பெற்ற வெள்ளை இச்சிறைச்சாலையில் மொத்தம் 137 தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் மூவர் டிசம்பர் 12 ம் தேதி பிப 1:00 மணிக்கு வார்ட் D ற்கு முன்பாக சிங்களக் கைதிகளினால் வெட்டிக் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வு நடந்த வேளையில் சிறை அதிகாரிகள் எந்நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர்களே வார்ட் D ஐத் திறந்து விட்டனர் என்றும் சொல்லப்படுகிறது. அவர்களின் முன்னாலேயே தமிழர்கள் மூவரும் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர் எனவும் தப்பியவர்களின் வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டது.

பிந்துனுவேவா படுகொலைகள்

பிந்துனுவேவா படுகொலைகள் அல்லது பிந்துனுவேவா சிறைச்சாலைப் படுகொலைகள் என்பது இலங்கையில் பிந்துனுவேவா என்ற இடத்தில் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழ் அரசியல் கைதிகள் 26 பேர் அக்டோபர் 25, 2000ம் ஆண்டில் சிங்கள கும்பல் ஒன்றினால் கொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மற்றும் பங்காளர்கள் குறிப்பாக வயதில் குறைந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பிந்துனுவேவா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இம்முகாம் இலங்கை தலைநகர் கொழும்பிற்குக் கிழக்கே சுமார் 200 கிமீ தூரத்தில் உள்ளது. மற்றும் இது மிகவும் பாதுகாப்புக் குறைவான ஒரு முகாம் ஆகும்.

2000, அக்டோபர் 25 அதிகாலையில் தடுப்பு முகாமின் சுற்றுப் புறத்தில் இருந்த சிங்களக் கிராம மக்கள் சில நூற்றுக்கணக்கானோர் கத்திகள், வாள், பொல்லுகள், சகிதம் முகாமிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கு நித்திரையில் ஆழ்ந்திருந்த தமிழர்களை வெட்டிக் கொன்றனர். இந்நிகழ்விற்கு முதல் நாளே அம்முகாமில் நிலை கொண்டிருந்த இலங்கை இராணுவத்தினர் அங்கிருந்து அகற்றப்பட்டிருந்தனர். இதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. அத்துடன் படுகொலைகள் இடம்பெற்ற பொழுது பாதுகாப்பிற்கென நிறுத்தப்பட்டிருந்த காவற்துறையினர் அதனைத் தடுப்பதற்கு எந்த வித முயற்சியும் எடுக்கவில்லை.

தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழர்களே முதலில் கலவரத்தில் ஈடுபட்டனர் என்றும் அதனைத் தடுக்க முயற்சி எடுத்த போதே இப்படுகொலைகள் நிகழ்ந்ததென்றும் தொடக்கத்தில் இலங்கை அரசு அறிவித்தது. எனினும் பின்னர் மிகவும் கோபமுற்ற நிலையில் இருந்த சிங்களவர்களை காவற்படையினரால் தடுக்க முடியவில்லை என்று கூறியது. கடமையில் இருந்த சில காவற்துறையினர் குற்றவாளிகளாகக் காணப்பட்டு சிறையிலடைக்கப்பட்டாலும் பின்னர் இவர்கள் விடுவிக்கப்பட்டனர்.